×

சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக 40க்கும் மேற்பட்ட இளம் மாடலிங் பெண்களை மயக்கி நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகளில் உல்லாசம்; வசீகரமான உடல் அழகால் மடக்கிய துணை நடிகர் அதிரடி கைது: நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதும் அம்பலம்

சென்னை: சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி, 40க்கும் மேற்பட்ட இளம் மாடலிங் பெண்களை மயக்கி பண்ணை வீடுகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்த துணை நடிகரை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனிடம் விளம்பர மாடலிங்கில் ஈடுபட்டு வரும் 3 இளம்பெண்கள் கடந்த வாரம் தனித்தனியாக பரபரப்பு புகார் ஒன்று அளித்தனர். இவர்களில், ஓட்டேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில், ‘‘2019ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையை சேர்ந்த முகமது சயாத் (26) என்பவர் பழக்கமானார். எங்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முகமது சயாத் மாடலிங் செய்து வருகிறார். அதேபோல் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.  2020ல் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடம் அருகே அவரது காரிலேயே என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.அதன்பிறகு என்னை திருமணம்  செய்வதாக கூறி அடிக்கடி தனிமையில் இருந்தார். கடந்த டிசம்பர் 21ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அவரது காரில் என்னை அழைத்து சென்றார். அப்போது அந்த ஓட்டலில் இருந்த 3 பெண்கள் முகமது சயாத்தை திருமணம் செய்யப் போவதாக என்னிடம் கூறினர். இதனால் சந்தேகப்பட்டு, நான் முகமது சயாத் செல்போனை எடுத்து பார்த்தேன். அதில் முகமது சயாத் 20க்கும் மேற்பட்ட பெண்களை தனது வீட்டிற்கு அழைத்து  சென்று உல்லாசமாக இருந்த வீடியோக்கள் மற்றும் பெண்களுடன் நிர்வாணமாக இருப்பதும், படுக்கையில் ஒன்றாக இருப்பது போன்ற படங்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என்னை போல் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முகமது சயாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகைப்படங்களுடன் புகார் கூறியிருந்தார்.இந்த புகாரின்படி, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் தனது தனிப்படையினர் மூலம்  முகமது சயாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையில் உள்ள லில்லி ஒயிட் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த முகமது சயாத் (26), விளம்பர மாடலிங் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவரது தந்தை சவுகார்பேட்டையில் பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பருப்புகள் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். . கல்லூரியில் படிக்கும் போதே அவர், விளம்பர மாடலிங்களில் ஈடுபட்டு சிறந்த மாடலிங் பட்டங்கள் பெற்றுள்ளார். பாடி பில்டிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர், தற்போது டெக்ரேஷன் ஈவண்ட் மேனேஜ்மென்ட் வேலை செய்து வருகிறார். சின்னத்திரையிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பல பெண்களுக்கு காதல் வலைவிரித்துள்ளார் சயாத். அதில் விழும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாகவும், உன்னை பெரிய மாடலிங் நபராக உருவாக்குகிறேன் என்றும் ஆசைவார்த்தை கூறி, தனியாக சந்தித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மாடலிங்கில் ஈடுபட விரும்பும் இளம்பெண்களை தனது  வீடு,  நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கஞ்சா உள்ளிட்ட  போதை பொருட்களை பயன்படுத்திய பிறகு கொடூரமாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். சில பெண்கள் இவரது செயலை கண்டு மயங்கி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த வகையில் கடந்த 6 மாதத்தில் மட்டும் முகமது சயாத் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள் என 100 முறை அறைகளை ஆன்லைனில் புக் செய்து இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு ஆதாரமாக, அவரது செல்போனில் இருந்து அவரது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகளுக்கு பணம் பரிமாற்றம் செய்ததன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்களுடன் ஒன்றாக இருக்கும் போது, அவர்களுடன் நிர்வாணமான நிலையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொள்வது முகமது சயாத் வழக்கமாக இருந்துள்ளார். அதற்கு முகமது சயாத்துடன் சென்ற இளம்பெண்களும் தாங்கள் பெரிய மாடலிங்காக வரவேண்டும் என்ற ஆசையில் தன் சுய விருப்பத்தின்படி பல கோணங்களில் நிர்வாண நிலையில் புகைப்படம் எடுக்க அனுமதி அளித்துள்ளனர். ஹூகா போதைக்கு அடிமையானதால் முகமது சயாத், ஹூகா அடிக்கும்போது தனது ஆசைக்கு ஏற்றப்படி இளம்பெண்களை போன் செய்து புதிய விளம்பரம் மாடலிங் வாய்ப்பு கிடைத்துள்ளது. வேண்டும் என்றால் உடனே என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று கூறி அவருக்கு பிடித்த இளம்பெண்ணை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். முகமது சயாத் அளித்த தகவலின்படி கல்லூரி மாணவிகள், மாடலிங் பெண்கள் என 40க்கும் மேற்பட்ட பெண்களை தனது வசீகர மாடலிங் மூலம் ஏமாற்றி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார். அதை அவர் சர்வசாதாரணமாக 40 பெண்கள் இருக்கும் என்று விசாரணையில் கூறுகிறார். ஆனால், உண்மையில் முகமது சயாத் பயன்படுத்தி வந்த செல்போன் மற்றும் அவரது வங்கி கணக்குகள் மூலம் பட்டியல் எடுத்தால் 80க்கும் மேற்பட்ட பெண்களை இவர் சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்டதொழிலதிபர்கள் மகள்களும் சிக்கி இருப்பதும் அம்பலமாகியுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.ஆன்லைனில் குவியும் புகார்கள்: முகமது சயாத் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பலர் ஆன்லைன் மூலம் அவர் மீது புகார் அளித்து வருகின்றனர். இதனால் முகமது சயாத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.என்னை பழிவாங்குகின்றனர்: முகமது  சயாத் ‘நான் எந்த பெண்ணையும் வலுக்கட்டாயமாக எனது ஆசைக்கு அழைக்க வில்லை.  அவர்களாகவே விரும்பி வந்தவர்கள். என்னை திருமணம் செய்ய வேண்டும் என்ற  ஆசையில் என் மீது புகார் அளித்துள்ளனர். என்னை இளம்பெண்கள் அவர்களின்  ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டு தற்போது வேண்டும் என்றே பழிவாங்குகின்றனர்  என்று கூறியுள்ளார்.சிறையில் அடைப்பு: போலீசார் கைது செய்யப்பட்ட முகமது சயாத்திடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அதை பதிவு செய்ய பயன்படுத்திய செல்போன்கள், சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்யப்பட்ட முகமது சயாத்தை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைதொடர்ந்து துணை நடிகர் மற்றும் மாடலிங் செய்து வந்த முகமது சயாத் மீது கற்பழிப்பு, மிரட்டல், பெண் வன் கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்ேவறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். …

The post சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக 40க்கும் மேற்பட்ட இளம் மாடலிங் பெண்களை மயக்கி நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகளில் உல்லாசம்; வசீகரமான உடல் அழகால் மடக்கிய துணை நடிகர் அதிரடி கைது: நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதும் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...